திருப்பதி திருக்குடை ஊர்வலம் சென்னை பூக்கடை பகுதியில் இருந்து புறப்பட்டு திருப்பதிக்கு நாளை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட உள்ளது. இதையடுத்து, அந்த பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை போக்குவரத்து போலீஸார் நேற்று (செப்.,30) வெளியிட்ட செய்திக்குறிப்பில், காலை 8 மணி முதல் ஊர்வலம் வால்டாக்ஸ் சாலையை கடக்கும் வரை என். எஸ். சி போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. வாகன ஓட்டிகள் ஈ. வே. ரா சாலை, ராஜாஜி சாலை, வால்டாக்ஸ் சாலை, பேசின் பிரிட்ஜ் சாலை மற்றும் பிரகாசம் சாலையை பயன்படுத்தலாம்.
பிற்பகல் 3 மணி முதல் ஊர்வலம் யானைக்கவுனி பாலத்தை கடக்கும் வரை வால்டாக்ஸ் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. வாகன ஓட்டிகள் பேசின் பிரிட்ஜ் சாலை, மின்ட் வழியாக பிரகாசம் சாலை அல்லது ராஜாஜி சாலையை பயன்படுத்தலாம்.
திருப்பதி திருக்குடை ஊர்வலம் யானைக்கவுனி பாலத்தை கடக்கும்போது சூளை ரவுண்டானவிலிருந்து டெமலஸ் சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. வாகனங்கள் சூளை நெடுஞ்சாலை மற்றும் ராஜா முத்தையா சாலை வழியாக செல்லலாம். ஊர்வலம் ராஜா முத்தையா சாலையில் வரும்போது மசூதி பாயின்டிலிருந்து சூளை ரவுண்டானா நோக்கிச் செல்ல அனுமதியில்லை. அப்போது, வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.