11 புதிய திட்டங்களை செயல்படுத்த கோரி அமைச்சர் எ. வ. வேலு மனு

57பார்த்தது
11 புதிய திட்டங்களை செயல்படுத்த கோரி அமைச்சர் எ. வ. வேலு மனு
தமிழகத்தில் 11 புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டி கோரிக்கை மனுவை மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம், அமைச்சர் எ. வ. வேலு வழங்கினார்.

தமிழகத்தில் நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையப் பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் டெல்லியில் நேற்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மத்திய இணை அமைச்சர்கள் அஜய் தம்தா, எல். முருகன், தமிழக அரசின் சார்பில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ. வ. வேலு ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது, சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்களிப்பது மற்றும் தமிழகத்துக்கு தேவையான புதிய திட்டப்பணிகளாக, கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மற்றும் மதுரவாயல் - சென்னை வெளிவட்டச்சாலை வரையிலான உயர்மட்டச்சாலை, செங்கல்பட்டு - உளுந்தூர்பேட்டை வரை எட்டு வழிச்சாலையாக தரம் உயர்த்துதல், திருவாரூர் புறவழிச்சாலை, கன்னியாகுமரி- களியக்காவிளை வரை நான்கு வழிச்சாலை அமைத்தல், விக்கிரவாண்டி- கும்பகோணம்- தஞ்சாவூர் 4 வழிச்சாலை பணியை விரைவு படுத்துதல் குறித்து அமைச்சர் எ. வ. வேலு வலியுறுத்தினார்.

மேலும், தாம்பரம் – மதுரவாயல் – மாதவரம் புறவழிச்சாலையில் (சென்னை புறவழிச்சாலை) விடுபட்ட இணைப்பு வசதிகளை வழங்குதல் ஆகிய பணிகள் தொடர்பாக கோரிக்கை அளித்து வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி