அண்ணாமலையார் கோவிலில் குவிந்த பக்தர்கள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று(செப்.17) புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலையம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

பவுர்ணமி காலை 11. 22 மணிக்கு தொடங்கினாலும் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று அரசு விடுமுறை தினம் என்பதால் பக்தர்களின் வருகை அதிகரித்தது. பவுர்ணமியொட்டி நடை அடைப்பு இல்லாமல், இரவு 10 மணி வரை தொடர்ந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.

ராஜகோபுரம் வழியாக சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்கு திரண்டதால், கோயில் வெளி பிரகாரத்தில் மாட வீதி வரை தரிசன வரிசை நீண்டிருந்தது. சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. காலையிலேயே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்தனர்.