விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி, மல்லாங்கிணறு பகுதிகளில் விவசாய பெருங்குடி மக்கள் அதிகம் வாழும் பகுதியாகும். விவசாய மக்கள் பயன்பெற வேண்டி சென்னம்பட்டி அணைக்கட்டு 1986-ம் ஆண்டு திட்டம் தொடங்கப்பட்டது.
ஆனால் உரிய நேரத்தில் பணிகள் நிறைவடையாமல் இருந்ததால் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, வறண்ட நிலமான கரிசல் பூமியில் விவசாயம் மற்றும் விவசாய மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு சென்னம்பட்டி அணைக்கட்டு கனவுத் திட்டம் குறித்து சட்டமன்றத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு குரல் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து 16 கோடி செலவிட்டில் மல்லாங்கிணறு பகுதியில் உள்ள 9 கண்மாய்களுக்கு நீர்வழித்தடம் செல்லும் வகையில் கட்டப்பட்டது.
இதனால் சுமார் 750 ஏக்கர் விவசாய பாசன வசதி பெறும் வகையில் கட்டப்பட்டது. இந்த நிலையில் சென்னம்பட்டி அணைக்கட்டில் கட்டப்பட்ட வலது கால்வாயில் தற்போது பெய்த கனமழையினால் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. மறுகால் பாய்வதையொட்டி இன்று தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கொட்டும் மழையில் நேரில் பார்வையிட்டு தனது சொந்த ஊருக்கு 50 ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் வருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தார்.