விருதுநகர்: செவித்திறன் குறைப்பாடு மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல்

தமிழர் திருநாளான தைத்திருநாள் தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழர் திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். 

மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சியுடன் இந்த பொங்கல் திருவிழாவை கொண்டாடி வரும் நிலையில், விருதுநகர் அருகே சூலக்கரை பகுதியில் அமைந்துள்ள அரசு செவித்திறன் குறைப்பாடுடையோருக்கான மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகள் தமிழர் திருநாளான பொங்கல் திருவிழாவை கோலாகலமாக கொண்டாடினர். செவித்திறன் குறைவுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் 45 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். 

இவர்கள் தமிழர் பாரம்பரிய உடையான மாணவிகள் சேலை அணிந்தும், மாணவர்கள் தமிழர் பாரம்பரிய உடையான வேஷ்டி அணிந்தும், பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் சேலை அணிந்தும், வேஷ்டி சட்டையில் பள்ளி வளாகம் முழுவதும் வண்ண வண்ண கோலம் இட்டு பொங்கல் வைப்பதற்கான ஏற்பாட்டில் ஈடுபட்டனர். வாய் பேச முடியாத, காது கேளாத மாணவர்கள் தங்கள் சைகை மொழியிலேயே ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு மகிழ்ச்சியில் திளைத்தனர். 

அதைத்தொடர்ந்து பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் பொங்கல் பானையில் வெள்ளரிசி பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். இதில் மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

தொடர்புடைய செய்தி