விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்விமடை கிராமத்தில் 30க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக மக்கள் பீதியடைந்தனர். முக்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மதுரை அரசு மருத்துவமனை, மானாமதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தற்போது கல்விமடை கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்ட மூலம் இரண்டு மருத்துவ குழுவினர்கள் பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் கிராமத்தில் நடந்த கும்பாபிஷேக விழாவில் வெளியே வாங்கி விநியோகிக்கப்பட்ட குடிநீரை பருகியதால் அல்லது நேற்று கிராமத்தில் விற்பனை செய்யப்பட்ட மீனை அதிகளவிலான மக்கள் வாங்கி சமைத்த நிலையில் அதன் காரணமாக உடல் உபாதை ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.