ஸ்ரீவி: நீர் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் துவக்கம்

விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தின் சார்பில் நீர்பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் மாவட்டத்தில் 23 இடங்களில் துவங்கியது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிந்த பின்பு ஆண்டுதோறும் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடப்பது வழக்கம். 

இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் 20க்கும் மேற்பட்ட இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, கணக்கெடுப்பு துவங்கியது. மாவட்டத்தில் ராஜபாளையம் ஆறாவது மைல் நீர்த்தேக்கம், ஸ்ரீவில்லிபுத்தூரில் அத்திகுளம், பெரியகுளம், செங்குளம், வத்திராயிருப்பு, புதுப்பட்டி கண்மாய்கள், பிளவக்கல் அணை, சுந்தரபாண்டியம் கண்மாய்கள், ஆலங்குளம், வெம்பக்கோட்டை அணை, சிவகாசி பெரியகுளம், உலக்குடி, இருக்கன்குடி அணை ஆகிய 23 ஈரநிலங்களில் கணக்கெடுப்பு பணியில் வனத்துறையினரும், தன்னார்வலர்களும் பங்கேற்றனர். 

பைனாகுலர்கள் மூலம் தொலைதூரத்தில் உள்ள நீர்ப்பறவைகளை கண்டறிந்து அதனை பதிவு செய்தனர். மேலும் தொடர்ந்து கணக்கெடுப்பு தன்னார்வலர்கள் சேகரித்த தரவுகள் அடிப்படையில் உள்ளூர் மற்றும் வெளிநாடு நீர்பறவைகள் வருகை, எண்ணிக்கை விபரங்கள் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி