விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மிகவும் அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோவில் வைகாசி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று ஜூன் 8 நடைபெற்றது.ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ சிவகாமி அம்பாள் உடனூர் ஸ்ரீ வைத்தியநாத சுவாமி திருக்கோவில் மிகவும் பழமை வாய்ந்த இக்கோவிலில் இந்த வருடத்திற்கான வைகாசி திருவிழா கடந்த மாதம் 31 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனைத்தொடர்ந்து ஸ்ரீ வைத்தியநாத சுவாமி, ஸ்ரீ சிவகாமி அம்பாள் தினம்தோறும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தனர். தொடர்ந்து இன்று 9 ஆம் திருநாளான தேரோட்டம் நடைபெற்றது.
முதல் தேரில் ஸ்ரீ வைத்தியநாத சுவாமி, பிரியாவிடை எழுந்தருளி ரதவீதிகளில் சுற்றி வந்தனர். அதனைத் தொடர்ந்து ஸ்ரீ சிவகாமி அம்பாள் எழுந்தருளிய தேரை ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நமச்சிவாய கோஷம் முழங்க திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று தேரோட்டம் நடைபெறுவதையொட்டி முன்னதாக ஸ்ரீ வைத்தியநாத சுவாமி, ஸ்ரீ சிவகாமி அம்பாள் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு உற்சவ மூர்த்திகள் தேரில் எழுந்தருளினர்.