விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் நேதாஜி சாலையில் பென்னிங்டன் கமிட்டிக்கு சொந்தமான 90 ஆண்டுகள் பழமையான வணிக வளாகம் உள்ளது. இங்குள்ள 120-க்கும் மேற்பட்ட கடைகளில் காய்கறி, வாழைஇலை, தேங்காய், பூ, மளிகை உள்ளிட்ட பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த வணிக வளாக கட்டிடம் கட்டி 90 ஆண்டுகளுக்கும் மேல் ஆவதால், கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு செய்த போது, பராமரிப்பு இல்லாததால் கட்டமைப்பு சிதைவு ஏற்பட்டு கட்டிடம் சேதமடையும் அபாயம் உள்ளது என்று தெரிவித்தனர்.
இதனால் இந்த கட்டிடத்தால் பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் வணிக வளாகத்திற்குள் யாரும் நுழைய கூடாது எனவும், ஒரு மாதத்திற்குள் வணிக வளாகத்தை இடித்து அகற்ற வேண்டும் என சார்ஆட்சியர் உத்தரவிட்டார். இந்த உத்தரவு குறித்த அறிவிப்பு பலகை வருவாய்த்துறை சார்பில் மார்க்கெட் முன் நேற்று ஏப்ரல் 14 இரவு வைக்கப்பட்டது. இதை கண்டித்து வியாபாரிகள் மார்க்கெட் முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் மற்றும் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்திய போது அறிவிப்பு பலகையை அகற்ற வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.