மார்கழி மாதத்தில் பாவை நோன்பிருந்த ஆண்டாள் பங்குனி உத்திர நாளில் ரெங்கமன்னாரை திருமணம் செய்து கொண்டார். அதன்படி ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தில் ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு திருக்கல்யாண திருவிழா கடந்த ஏப்ரல் 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நேற்று இரவு ஏப்ரல் 11 ஆண்டாள் சன்னதி முன் உள்ள ஆடிப்பூர கொட்டகையில் உள்ள மணப்பந்தலில் ரெங்கமன்னார் எழுந்தருளிய பின் பெரியாழ்வார் பூர்ண கும்பத்துடனும், ஸ்ரீஆண்டாள் அங்கமணிகளுடன் புறப்பாடாகி மணப்பந்தலில் எழுந்தருளினார். தொடர்ந்து ரெங்கமன்னாருக்கு பெரியாழ்வார் ஆண்டாளை கன்னிகா தானம் வழங்கும் வைபவம் நடைபெற்றது. பின்னர் திவ்ய தம்பதிகளான ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருக்கல்யாண விழாவில் கலந்து கொண்ட 15 ஆயிரம் பேருக்கு விருந்து வழங்கப்பட்டது.