விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். இந்த கோயிலுக்கு கடந்த காலங்களில் தினந்தோறும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 10 பக்தர்கள் வரை உயிரிழந்தனர். இதனையடுத்து மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் 4 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி என்பது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மாசி மாத மகாசிவராத்திரியை முன்னிட்டு இன்று மகாலயசிவராத்திரிக்கு விடிய விடிய பூஜை நடக்கும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று பக்தர்கள் கோயில் மலைப் பகுதியில் தங்கி வழிபடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மகாசிவராத்திரியை முன்னிட்டு மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ள சதுரகிரி மலையில் குவிந்துள்ளனர். மேலும் பாதுகாப்புக்காக ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.