விருதுநகர்: மணல் அள்ளியவர்களை சுற்றிய வளைத்த சப்-கலெக்டர்

சிவகாசி அருகே அதிகாலையில் மண் அள்ளியவர்களை சுற்றிவளைத்து பிடித்த பெண் சப்-கலெக்டர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகாவுக்குட்பட்ட பல பகுதிகளில் அனுமதியின்றி மண் அள்ளுவதாக சமூக ஆர்வலர்களிடமிருந்து சப்-கலெக்டர் ப்ரியா ரவிச்சந்திரனுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து சப்-கலெக்டரின் உத்தரவின்பேரில் மண் கடத்துபவர்களைப் பிடிக்க வருவாய்த்துறை அதிகாரிகள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும் இரவு நேரங்களில் சப்-கலெக்டர் ப்ரியா ரவிச்சந்திரன் திடீர் ஆய்வுகள் மேற்கொண்டார். 

அப்போது மாரனேரி போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட புலிப்பாறைப்பட்டி கொங்கள்குளம் ரோட்டில் உள்ள அரசுக்குச் சொந்தமான கண்மாய் பகுதியில் சிலர் அனுமதியின்றி கிராவல் மண் எடுப்பதாக அதிகாலை 2 மணிக்கு சப்-கலெக்டர் ப்ரியா ரவிச்சந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். அப்போது குருமூர்த்தி (39) என்பவர் தலைமையில் 3 பேர் மணல் அள்ளும் எந்திரத்தைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக கிராவல் மண் அள்ளிக்கொண்டிருந்தனர். சப்-கலெக்டர் ப்ரியா ரவிச்சந்திரன் சம்பவ இடத்துக்கு சென்றபோது அங்கிருந்தவர்கள் தப்பி ஓடினர். மேலும் மண் அள்ளும் எந்திரத்தில் அமர்ந்திருந்த குருமூர்த்தி மட்டும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் சிக்கியதாக கூறப்படுகிறது. அவரைப் பிடித்து மாரனேரி போலீசார் அவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி