விருதுநகர் மாவட்டம், சிவகாசி காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த நான்கு மாதங்களாக செல்போன் திருட்டு போனதாக வந்த புகார்கள் குறித்து, குற்றப்பிரிவு போலீசார் முறைப்பாடு பதிவு செய்து, செல்போன் விவரங்களை மாவட்ட சைபர் குற்றப்பிரிவுக்கு மேல் நடவடிக்கைக்காக பரிந்துரை செய்தனர். இதற்காக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த இணையதளத்தில் செல்போன் விவரங்களை பதிவு செய்து, திருடப்பட்ட செல்போன்களின் பயன்பாடு குறித்து கண்காணித்து வந்தனர்.
அதன் மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், கடந்த 4 மாதங்களில் திருடப்பட்ட 40 செல்போன்களை குற்றப்பிரிவு போலீசார் மீட்டனர். நேற்று சிவகாசி டிஎஸ்பி பாஸ்கர் மீட்கப்பட்ட செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பரமேஸ்வரி, நகர் காவல் ஆய்வாளர் செல்லப்பாண்டி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.