சிவகாசி: தற்கொலைக்கு முயன்ற தனியார் நிறுவன ஊழியர்

சிவகாசி அருகே கடன் தொல்லையால் தற்கொலைக்கு முயன்ற தனியார் நிறுவன ஊழியர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி சிவன்மாடதெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 42), இவர் ஊரணிமேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் குடும்பத் தேவைக்காக அந்த நிறுவனத்தின் உரிமையாளரிடம் ரூ.30 ஆயிரம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த கடன் தொகையை வாரந்தோறும் ரூ.1000 கொடுத்து அடைத்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 3 மாதமாக கடன் தொகையை செலுத்தவில்லை என கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரம் அடைந்த அந்நிறுவனத்தின் உரிமையாளர் சம்பவத்தன்று இரவு செல்வத்தின் வீட்டிற்கு சென்று கடனை திருப்பிக் கேட்டு தகராறு செய்து செல்வத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த செல்வம் விஷம் குடித்ததாக தெரிகிறது. உடனே அவரை மீட்டு உறவினர்கள் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து செல்வத்தின் மனைவி ஈஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி