சிவகாசி: அரசு மருத்துவமனையில் மும்முரமாக நடைபெறும் புதிய கட்டிட பணிகள்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அரசு மருத்துவமனையில் மத்திய அரசு சார்பில் ரூ. 32.5 கோடியில் நவீன தீவிர சிகிச்சை பிரிவு, தாய் சேய் நல மையம் கட்டும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. 80 சதவீதம் பணிகள் முடிந்த நிலையில் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பே பயன்பாட்டிற்கு வர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

சிவகாசி அரசு மருத்துவமனையில் மத்திய அரசின் தேசிய சுகாதார இயக்கம், ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ. 23.78 கோடியில் 30 படுக்கைகள் கொண்ட நவீன தீவிர சிகிச்சை பிரிவு, ரூ. 8.9 கோடியில் தாய் சேய் நல மையம் கட்டுமான பணிக்கு கடந்த 2024-ல் பிரதமர் மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். 

இந்த புதிய கட்டடம் 70,321 சதுர அடி பரப்பளவில் 7 தளங்களை கொண்டதாக கட்டப்பட்டு வருகிறது. இதில் மருத்துவ ஆய்வகம், பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவு, தாய்ப்பால் வங்கி, மகப்பேறு சிகிச்சை பிரிவு, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக அறுவை அரங்கு ஆகியவை அமைய உள்ளது. 

இந்த கட்டுமான பணி நிறைவடைத்தால் சிவகாசி அரசு மருத்துவமனையில் கூடுதலாக 136 படுக்கை வசதிகள் மற்றும் பல்வேறு நவீன வசதிகள் கொண்டதாக விரிவடையும். 15 மாதங்களில் கட்டுமான பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாக கட்டுமான பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி