சிவகாசி: குடும்பத் தகராறில் மனைவி கழுத்தை அறுத்துக் கொன்ற கணவன்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, முருகன் காலனியைச் சேர்ந்தவர் திருமலைக்குமார் (36). இவரது மனைவி ராஜலட்சுமி (26). இவர்களுக்கு 8 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. திருமலைக்குமார் கோயம்புத்தூரில் உள்ள ஒரு அச்சகத்தில் வேலை பார்த்து வருகிறார். ராஜலட்சுமி தனது மகளுடன் சிவகாசியில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். விடுமுறை நாட்களில் மட்டும் திருமலைக்குமார் வீட்டுக்கு வந்து செல்வார் என்று கூறப்படுகிறது. 

கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருமலைக்குமார் சிவகாசியில் உள்ள வீட்டிற்கு வந்ததிலிருந்து கணவன், மனைவி இருவரும் சண்டை போட்டுள்ளனர். இன்று காலை மீண்டும் இவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கடும் ஆத்திரத்திலிருந்த திருமலைக்குமார், ராஜலட்சுமியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். 

இது குறித்து தகவலறிந்த சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ராஜலட்சுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், மனைவியை கொலை செய்து விட்டு, தலைமறைவாக இருக்கும் கணவனை வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி