தோட்டத்திற்குள் புகும் யானைகள் போதிய உணவு கிடைக்காத பட்சத்தில் சிறிய தென்னை மரங்கள் மற்றும் வாழை மரங்களை சாய்த்து அதன் குருத்துகளை உண்பதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ராஜபாளையம் அருகே சேத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பிராவடி பீட் பகுதியில் உள்ள தோட்டத்திற்குள் காட்டு யானை புகுந்து மா மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்தியது. தொடர்ந்து அதே பகுதியில் யானை முகாமிட்டுள்ளதால் அறுவடை நேரத்தில் தோட்டத்தில் தங்கியுள்ள விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
இதில் தற்போது வரை 30-க்கும் மேற்பட்ட தென்னை மற்றும் மா மரங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பிராவடி பீட் பகுதியில் வனத்தை விட்டு விலங்குகள் வெளியேறுவதை தடுக்க மலையடிவாரத்தில் அகழிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அவற்றை தாண்டி தோட்டத்திற்குள் யானைகள் வருவது தொடர்கதையாகியுள்ளது. யானைகள் தோட்டத்திற்குள் புகுவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.