விருதுநகர்: குழந்தை தொழிலாளர்கள் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி

தமிழ்நாடு முழுவதும் குழந்தை தொழிலாளர்கள் முறையை எதிர்த்து விழிப்புணர்வு பேரணி, பிரச்சாரம், கையெழுத்து இயக்கம் போன்றவை நடத்தப்பட்டு வருகின்றன. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை எதிர்ப்பு தினம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. 

ராஜபாளையம் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவர் சார்பு நீதிபதி சண்முகவேல் ராஜ் தலைமையில் நீதிபதிகள் ராமநாதன் மற்றும் பவித்ரா பிரசன்னா ஆகியோர் துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கினார்கள். மேலும் குழந்தை தொழிலாளர்கள் முறையை முழுவதுமாக ஒழிப்பதற்காக அனைவரும் கடைப்பிடிக்க உறுதிமொழி எடுக்கும் வகையில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. 

பேனரில் நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர் சங்கத் தலைவர் குமார் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கையெழுத்திட்டனர். மேலும் குழந்தை தொழிலாளர்கள் முறை எதிர்ப்பு விழிப்புணர்வு குறித்த வேன் பிரச்சாரத்தை கொடி அசைத்து நீதிபதி சண்முகவேல் ராஜ் துவக்கி வைத்தார். உடன் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி