விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் பகுதியில் அமைந்துள்ளது சிவன் கோவில் தெரு. இந்த பகுதியில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். தினமும் இப்பகுதியில் பள்ளி குழந்தைகள், வேலைக்குச் செல்வோர் என 100க்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர். இந்நிலையில், அந்தத் தெருவில் கடந்த இரண்டு வருடங்களாக பூட்டியிருந்த வீட்டில் அந்தப் பகுதியில் பாம்பு சுற்றித் திரிவதாகக் கூறி, அந்தப் பகுதி பொதுமக்கள் பாம்பாட்டிகளுக்குத் தகவல் அளித்ததன் பேரில், பாம்பாட்டிகள் வந்து பூட்டியிருந்த அந்த வீட்டில் 10க்கும் மேற்பட்ட நல்ல பாம்புகள், சாரைப் பாம்புகளைப் பிடித்துச் சென்றனர். குடியிருப்புப் பகுதிகளில் பாம்புகள் படைஎடுத்திருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பாம்புப் பிடிக்கும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.