புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர், வன்னியர் வீதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 65; தட்டு வண்டியில் சென்று பழைய புத்தகம், இரும்பு விற்கும் வியாபாரம் செய்து வந்தார். நேற்று காலை இ. சி. ஆரில், சின்னமுதலியார்சாவடியில் தட்டுவண்டியுடன், சாலையை கடக்க முயற்சித்தார். அப்போது, சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி அதிவேகமாக வந்த அரசு பஸ் தட்டு வண்டியில் மோதியது. அரசு பஸ்சின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே ராஜேந்திரன் உயிரிழந்தார். உடனடியாக டிரைவர் பஸ்சை நிறுத்த முடியாததால், நுாறு மீட்டர் துாரத்திற்கு சென்று நின்றது. பஸ்சின் முன்பக்கத்தில் சிக்கிய தட்டுவண்டியையும் இழுத்து சென்றது. இந்த விபத்தில் உயிரிழந்தவரின் உடலை கோட்டக்குப்பம் போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜேந்திரன் மகன் செந்தில்குமார் கொடுத்த புகாரில், தமிழக அரசு பஸ் டிரைவர், வடலுார் ஆரோக்கியராஜ் மீது கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.