கண்டாச்சிபுரம் அருகே காரில் கடத்தப்பட்ட குட்கா பறிமுதல்

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்து வருவதாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணனுக்கு இரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட கண்காணிப்பாளரின் தனிப்படை போலிசார் கண்டாச்சிபுரம் அடுத்த மழவந்தாங்கல் சோதனைசாவடி பகுதியில் இரகசிய ரோந்து பணியில் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை திருவண்ணாமலை மார்க்கத்திலிருந்து மழவந்தாங்கல் நோக்கி வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். 

அதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 5 மூட்டைகளில் சுமார் 70 கிலோ எடைக்கொண்ட குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து கார் மற்றும் குட்கா பொருட்கள் மற்றும் காரை ஓட்டிவந்த நபரை கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கண்டாச்சிபுரம் உதவி ஆய்வாளர் காத்தமுத்து விசாரணை நடத்தியதில், மலையரசன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் சுபாஷ்(32), என்பவர்தான் கடைகளுக்கு விற்பனை செய்ய குட்கா கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து உதவி ஆய்வாளர் காத்தமுத்து குட்கா கடத்திய கார் மற்றும் 5 மூட்டைகளில் இருந்த 2 லட்சம் மதிப்பிலான 70 கிலோ குட்காவை பறிமுதல் செய்து சுபாஷ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி