திண்டிவனம்: இனி பாமகவிற்கு நானே தலைவர்; ராமதாஸ் அறிவிப்பு

திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் ராமதாஸ், வன்னியர் சங்கம் 1980ல் தொடங்கிய காலத்திலிருந்து பல்வேறு பணிகளை செய்து வருகிறது என்றும், தான் சட்டமன்றத்திற்கோ நாடாளுமன்றத்திற்கோ சென்றதில்லை, பதவி பெறும் ஆசை எனக்கு இல்லை, மக்கள் மனதில் இடம்பெற்றுள்ளேன் என்றும் கூறினார். 

இன்று முதல் பாமக நிறுவனர் என்ற முறையில் பட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பொறுப்பினை தானே எடுத்துக்கொள்வதாகவும், பாமகவின் தலைவராக செயல்படுவதாகவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும், பாமகவின் தலைவராக செயல்பட்டு வந்த அன்புமணி ராமதாஸ் இன்று முதல் செயல் தலைவராக நியமிக்கப்படுவதாகவும், வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டும் இளைஞர்களை வழி நடத்த இந்த முடிவினை எடுத்துள்ளதாக ராமதாஸ் விளக்கமளித்துள்ளார். 

மாமல்லபுரத்தில் மே 11 ஆம் தேதி நடைபெறும் வன்னியர் மாநாடு மாபெரும் வெற்றி மாநாடாக அமையும் என்றும், அனைத்து நிர்வாகிகளும் மாநாடு வெற்றி பெற ஒன்றினைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். தமிழகத்தில் நீட் தேர்வு என்று ஒன்று இருக்க கூடாது, அது ஒழிக்கப்பட வேண்டும் என்றும், நடிகர் விஜய் 2026 தேர்தலில் திமுகவிற்கும் தமிழக வெற்றிக்கழகத்திற்கும் தான் போட்டியாக இருப்பார் என விஜய் கூறுவது அரசியலில் அவரவர் கூறும் கருத்து என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி