விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில், தாலுகா போலீசார் சார்பில் புறக்காவல் நிலையம் செயல்பட்டு வருகின்றது. இந்த காவல் நிலையம், வாகனங்கள் உள்ளே வந்து திரும்பும் பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில், இந்த காவல் நிலையம் எதிரில் போலீசார் மற்றும் பொதுமக்கள் இருசக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தி வருகின்றனர். இதனால், பஸ் நிலையத்திற்குள் வரும் பஸ்கள் திரும்ப முடியாமல், டிரைவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும், அப்படி திரும்பும்போது அங்கு நடந்து செல்லும் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அவல நிலை நீடித்து வருகின்றது. எனவே, தாறுமாறாக நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களை அகற்ற எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.