சென்னை, ராயபுரத்தைச் சேர்ந்தவர் முகமது இப்ராஹிம், (37); இவர், தனது மொபைல் போன் மூலம் இந்தியா மார்ட் என்ற செயலியை பார்த்தபோது, அதில், குறைந்த விலையில் தங்கம் தருவதாக ஒரு மர்ம கும்பல் விளம்பரப்படுத்தி இருந்தது. அதனை நம்பிய அவர் பேசியபோது, அந்த கும்பல் பணத்துடன் நேரில் வரும்படி கூறியது.
அதன்படி, கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி, முகமது இப்ராஹிம் உட்பட 5 பேர் காரில் வந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், சத்தியமங்கலம் அருகே வந்தபோது, அந்த கும்பல் முகமது இப்ராஹிம் உள்ளிட்டோரை மிரட்டி, அவர்களிடமிருந்த 7. 60 லட்சம் ரூபாயை பறித்து சென்றது. இதுகுறித்து, சத்தியமங்கலம் போலீசார் வழக்குபதிந்து, வழிப்பறி கும்பலை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், அந்த கும்பலை சேர்ந்த கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சேர்ந்த பன்னீர்செல்வம், (44); ஊத்தங்கரை, மாதம்பட்டி அடுத்த பாம்பன்டேம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்கிற துரை, (44);ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, விழுப்புரம் எஸ். பி. , தீபக்சிவாச், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில், கலெக்டர் உத்தரவுபடி, புழல் மற்றும் கடலுார் மத்திய சிறையில் உள்ள இருவரிடம், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான உத்தரவை சத்தியமங்கலம் போலீசார் வழங்கினர்.