வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நகர மற்றும் கிராமப்புறங்களில் நீர்நிலை கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் மழைக்காலங்களில் மழைநீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு மருத்துவமனை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் மழைநீரோடு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இது தொடர்பாக வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் கோ. செந்தில்குமார் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், மாவட்ட கண்காணிப்பு அதிகாரியும் போக்குவரத்து ஆணையாளருமான கஜலட்சுமி இன்று வாணியம்பாடி அரசு மருத்துவமனை, வளையாம்பட்டு, செட்டியப்பனூர் கூட்டுச்சாலை ஆகிய இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் மற்றும் கழிவுநீரை ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். நகரப் பகுதியில் ஒரு கிலோமீட்டர் அளவிற்கு ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். போக்குவரத்து ஆணையர், நகராட்சி ஆணையர் மற்றும் வருவாய்த்துறையினரோடு இணைந்து நீர்நிலை ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற உத்தரவிட்டார்.