திருப்பத்தூர் மற்றும் ஆம்பூர் தொகுதிகளை தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டி மனு

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பத்தூர் மற்றும் ஆம்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் ஏதேனும் ஒன்றினை தனித்தொகுதியாக அறிவிக்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேலூர் மற்றும் திருப்பத்தூர் மண்டல செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் விசிகவினர் மாவட்ட ஆட்சியதலைவரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவள்ளியிடம் மனு அளித்தனர். ஒருங்கிணைந்த வேலூர் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்ட நிலையில் வேலூர் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அதில் கே.வி.குப்பம், குடியாத்தம் ஆகிய இரண்டு தொகுதிகள் தலித்துக்களுக்கான தனித்தொகுதியாகவும் அங்கீகாரம் இருந்து வருகிறது. 

அதேபோல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் அரக்கோணம் சட்டமன்ற தொகுதி தலித்துக்களுக்கான தனித்தொகுதியாக அங்கீகாரம் இருந்து வருகிறது. அதேபோல் திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, ஆம்பூர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகள் அனைத்தும் பொது தொகுதியாக இருந்து வருகிறது. இந்த நான்கு சட்டமன்ற தொகுதிகளில் தலித்துக்கள் பெரும்பான்மையாக இருந்து வருகிறார்கள். எனவே தலித்துக்கள் அதிகம் பெரும்பான்மையாக உள்ள திருப்பத்தூர் மற்றும் ஆம்பூர் சட்டமன்ற தொகுதிகளில் ஏதேனும் ஒன்றினை தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி