ஜோலார்பேட்டை: ரயில் மோதி ஏழு எருமைகள் பலி; ரயில்வே போலீசார் விசாரணை

சென்னையில் இருந்து ஈரோடு வரை செல்லக்கூடிய ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை சென்று கொண்டிருந்த போது திருப்பத்தூர் மாவட்டம் சூர்பள்ளிப்பட்டு, கீழ்குரும்பர்த்தெரு என்ற இடத்தில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற 7 எருமை மாடுகள் மீது ரயில் மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானது. பின்னர் ரயில் லோகோ பைலட் சிறிது தூரத்தில் சென்றபின் நிறுத்தப்பட்டு மீண்டும் ரயில் இயக்கப்பட்டது. இதனால் தன்பாத், சிம்மலாபாத் கேரளா வரை செல்லக்கூடிய 2 விரைவு ரயில்கள் சுமார் அரை மணி நேரம் தாமதமாகச் சென்றன.

 தகவல் அறிந்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அடிப்பட்டு இறந்து கிடந்த 7 எருமை மாடுகளை அப்புறப்படுத்தினர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து யாருடைய எருமை மாடுகள் என்பது குறித்து ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஏற்கனவே வந்தே பாரத் ரயில் மீது மாடுகள் மோதி உயிரிழந்த சம்பவம் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் இதற்காக ரயில்வே துறையினர் ஒரு திட்டத்தை வகுத்து தற்போது சென்னையில் இருந்து பெங்களூர் வரை ரயில்வே தண்டவாளத்திற்கு இருபுறமும் இரும்பு பேரி கார்ட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி