திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சாமுண்டி அம்மன் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி தரணி ராஜன். இவர் விவசாயத்துடன் கோழி பண்ணை அமைத்து தொழில் செய்து வருகிறார். இவருடைய வளர்ப்பு கோழி பண்ணையில் சுமார் 3500-க்கும் மேற்பட்ட கோழிகள் இருந்தன. இந்நிலையில் கோழி பண்ணையில் இன்று விடியற்காலையில் 3 மணியளவில் கோழி பண்ணைக் கொட்டகையில் மின்தடை ஏற்பட்டு திடீரென தீப்பற்றி மலமலவென கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.
இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து பின்னர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தகவலின் பேரில் விரைந்து சென்ற ஆம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய அலுவலர் மெஹ்பூப் தலைமையில் தீயணைப்பு துறையினர் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் போராடியபின் தீயைக் கட்டுப்படுத்தினர்.
இருப்பினும் கொட்டகை மற்றும் கோழிகள் எரிந்து கருகி சாம்பலாகியுள்ளன. இதில் ரூபாய் 8 லட்சம் மதிப்பிலான பண்ணைக் கொட்டகை மற்றும் 3,500 கோழிகள் என மொத்தம் ரூ. 15 லட்சம் தீயில் கருகி சேதம் அடைந்துள்ளன.