சாத்தமங்கலம்: முன் விரோத தகராறில் தாக்குதல்; 6 பேர் மீது வழக்கு

பெரணமல்லூர் அடுத்த மேல் சாத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர்கள் வெங்கடேசன் (32), ஏழுமலை (44) இவர்களின் நிலம் அருகருகே உள்ளது. மேலும் நிலம் சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெங்கடேசன் தனது நிலத்தில் விளைந்த பயிர்களை அறுவடை செய்ய அறுவடை இயந்திரத்தை ஏழுமலை நிலத்தின் வழியே எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. 

அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மார்ச் 10 அன்று ஏழுமலை அவரது தந்தை பெருமாள் மற்றும் தாயார் பாஞ்சாலை ஆகியோர் வெங்கடேசன் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் எடுத்து வந்த கட்டையால் வெங்கடேசன் அவரது தந்தை காசி மற்றும் தாயார் எல்லம்மாள் ஆகியோரை சரமாரியாக தாக்கியுள்ளனர். 

மேலும் வெங்கடேசன் தரப்பினர் வீட்டில் இருந்து அருவாள் எடுத்து வந்து எதிர் தரப்பினரை வெட்டி தாக்குதலில் ஈடுபட்டதால் இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட காயங்களால் ஆரணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து பெரணமல்லூர் போலீசாரிடம் இரு தரப்பினரும் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி