2, 688 அடி உயரமலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. மகா தீபத்தை காண உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து அரோகரா என்ற பக்தி கோஷத்துடன் தீப தரிசனம் செய்தனர். வீடுகள் முன்பும், கடைகள் முன்பும் பலர் அகல் விளக்குகளை ஏற்றினர். மலையில் மகா தீபம் ஏற்றப்பட்ட போது நகரின் பல்வேறு இடங்களில் வான வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டது. இதனால் திருவண்ணாமலை நகரமே ஜொலித்தது. மேலும் தீபத் தரிசனம் செய்துவிட்டு நள்ளிரவில் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். குறிப்பாக சின்ன கடைவீதி, தேரடி வீதி, திருவூடல் தெரு ஆகிய பகுதிகளில் பக்தர்கள் மிகுந்த நெரிசலுடன் கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. திருவண்ணாமலையில் கார்த்திகை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் இன்று மாலை தொடங்கி நாளை மாலை நிறைவடைகிறது.
எனவே இன்று இரவு கிரிவலம் செல்ல உகந்தது என அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனையொட்டி அதிகாலை முதலே பக்தர்கள் கிரிவலம் வர தொடங்கினர்.
பகலில் கூட்டம் குறைவாக காணப்பட்டது. நேரம் செல்ல செல்ல பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது. கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளேயும், வெளியேயும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தரிசனம் செய்ய 5 மணி நேரம் ஆனது.