ஆரணி: விவசாயிகள் நூதனப் போராட்டம்

ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன் கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்கத்தினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தின்கீழ் ஒரு நாள் கூலியாக மத்திய அரசு ரூ. 339 வழங்கும் நிலையில், தமிழக அரசு ரூ. 70 மட்டுமே வழங்கி பணி செய்த அளவுக்கு மட்டுமே கூலி என ஏமாற்றி வருவதாகக் குற்றஞ்சாட்டினர். மேலும், 100 நாள் வேலையை குறைந்தபட்சம் 70 நாள் மட்டுமே வழங்குவதாகவும், நான்கு ஆண்டுகளில் நபருக்கு ரூ. 60 ஆயிரம் வரை ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்து முழக்கமிட்டனர். 

திமுக ஆட்சியில் விவசாயிகள் வஞ்சிக்கப்படுவதாகவும், ஊரக வேலைத் திட்ட ஊதியத்தை மாநில அரசு முறையாக தொழிலாளர்களுக்கு வழங்குகிறதா என்று மத்திய அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து, உணவில் மண்ணைப் போட்டு சாப்பிடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், விவசாய சங்க மாவட்டத் தலைவர் வாக்கடை புருஷோத்தமன் தலைமை வகித்தார். அக்ராபாளையம் செந்தில், மேட்டுக்குடிசை பெருமாள், மடவிளாகம் சிவா, புலவன்பாடி மணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி