திருவண்ணாமலையில் தொல். திருமாவளவன்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை தொல். திருமாவளவன் சுவாமி தரிசனம் செய்தார். தொகுதி எம்.பி. சி.என். அண்ணாதுரை உடனிருந்தார். இதைத் தொடர்ந்து, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பல்கலைக்கழகம் தொடர்பான 10 மசோதாக்களை திட்டமிட்டு காலம் தாழ்த்தி, ஆளுநர் ஆர்.என். ரவி கிடப்பில் போட்டிருந்தார். இதுதொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் சட்டத்துக்கு விரோதமாக ஆளுநர் செயல்பட்டுள்ளார் என்பதைக் சுட்டிக்காட்டி, 10 மசோதாக்களையும் சட்டமாக்கி வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. 

நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசு நிறைவேற்றி, ஆளுநர் வழியாக ஒப்புதலுக்கு அனுப்பியதை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்கு தமிழக அரசு எடுத்துச் செல்லும் என நம்புகிறோம். சட்டப்பேரவை, மக்களவைத் தொகுதிகளுக்கான மறுவரையறை நடைபெறுவதைத் தவிர்க்க இயலாது. மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தாமல், மறுவரையறை செய்வது என்பது இயலாத ஒன்றாகும். தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு மாற்றாக ஒரு கூட்டணி உருவாகவில்லை. அதிமுகவுடன்தான் பாஜக கூட்டணி அமைக்கும். அதிமுக இல்லாமல் பாஜக தேர்தலை சந்திக்காது. கலசப்பாக்கம் அருகே மண் கடத்தலை தடுத்த காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தொடர்புடைய செய்தி