திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பணியாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்ட முதன்மை ஒருங்கிணைப்பாளர் சி. சோமசுந்தரம் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பழ. சீனிவாசன், கு. பிச்சாண்டி, ஏ. அருள்தாஸ், ஏ. அன்பழகன், ஜி. ரமேஷ் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட நிதிக் காப்பாளர் கோ. சேட்டு வரவேற்றார். 

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலச் செயலர் மா. அதியமான் முத்து சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும். அரசு அலுவலர்களுக்கு வழங்கிய 7-ஆவது ஊதியக்குழு நிர்ணயத்தில் 21 மாத நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். 

தலைமைச் செயலகம் முதல் அனைத்துத் துறைகளிலும் உள்ள அனைத்துப் பிரிவு காலிப் பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும். தமிழகம் முழுவதும் அனைத்து அரசுத் துறைகளில் பதவி உயர்வை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தொடர்புடைய செய்தி