தி.மலை: சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளால் பரபரப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் வட்டத்தில் பிரம்மதேசம், தென்னம்பட்டு ஆகிய கிராமங்களில் அரசு சார்பில் தனியார் நேரடி நெல் கொள்முதல் (என்சிசிஎப்) நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் பிரம்மதேசம், புதூர், சீயமங்கலம், புலிவலம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனை செய்தனர். நெல் மூட்டைகளுக்கு கடந்த 3 மாதங்களுக்கும் மேலாகியும் இதுவரை பணம் வழங்கப்படவில்லையாம். உரிய நேரத்தில் பணம் வழங்காததால், விவசாயிகள் சுப, துக்க நிகழ்ச்சிகளுக்கு செலவு செய்ய பணம் இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர். 

இந்த நிலையில், சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பிரம்மதேசம் புதூர் கூட்டுச்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த செய்யாறு டிஎஸ்பி (பொ) கோவிந்தசாமி மற்றும் பிரம்மதேசம் போலீசார் நிகழ்விடத்துக்குச் சென்று மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், தனியார் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் (என்சிசிஎப்) இருந்து விவசாயிகளுக்கு நெல் கொள்முதலுக்கான பணத்தை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதை ஏற்று விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியலால் அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி