திருவண்ணாமலையில் 15 சவரன் நகைகள் திருட்டு

திருவண்ணாமலை வேங்கிக்கால் அருணாச்சலம் நகரைச் சேர்ந்தவர் இனியன்(66). ஓய்வுபெற்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர். அவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இனியன் தனது அண்ணன் இறப்புக்காக கடந்த 9ம் தேதி குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார். 

அவரது வீட்டில் 78 வயதான அவரது அக்கா மட்டும் தனியாக இருந்தார். இந்நிலையில், அண்ணனின் இறுதி நிகழ்வுகள் முடித்துவிட்டு, நேற்று முன்தினம் இரவு இனியன் வீட்டுக்கு வந்தார். அப்போது, அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்தது பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும், அதில் இருந்த 15 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ. 17,500 ரொக்கம் ஆகியவை திருடுபோயிருந்தது தெரியவந்தது. 

அவரது அக்கா வயதானவர் என்பதால், அறையில் இருந்து வெளியில் வர முடியாத நிலையில், படுக்கை அறையில் மட்டுமே இருந்துள்ளார். எனவே, பீரோ வைத்திருந்த மற்றொரு படுக்கை அறைக்குள் மர்ம நபர்கள் நுழைந்து, இந்த துணிகர திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. 

இது குறித்து, திருவண்ணாமலை தாலுகா போலீசில் இனியன் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி