திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி கிரிவலம் மிகவும் பிரபலமானது. அத்துடன், ஒவ்வொரு நாளும், அங்கு கிரிவலம் நடைபெற்று வருகிறது. இங்கு 14 கிலோ மீட்டர் தூரமுள்ள கிரிவலப்பாதையில் வெளிமாவட்ட பக்தர்கள் மற்றும் வெளிமாநில பக்தர்களும் வருவது வழக்கம். தமிழ்நாட்டு பக்தர்கள் மட்டுமன்றி, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மற்றும் ஏனைய மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குழுவாக நடனமாடியும், சிவனின் பக்தி பாடல்களை இசைத்தும் கிரிவலம் மேற்கொள்வது வழக்கம். இந்த நிலையில், ஒரு பக்தர் நிர்வாணமாக கிரிவலம் மேற்கொண்டுள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தகவலறிந்த போலீசார் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தியதுடன், புத்தாடையை அவருக்கு அணிவித்து அறிவுரைகளை வழங்கி அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.