திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உலக சமாதான ஆலயம் சார்பில் உலக அமைதி தினம் அனுசரிக்கப்பட்டது. கடந்த 1918 ஆம் ஆண்டு முதலாம் உலகப் போர் முடிவுற்றதை நினைவுகூரும் வகையில் நவம்பர் 11ஆம் தேதி இந்த தினம் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ பரஞ்சோதி யோகா கல்லூரி சார்பில் உடுமலை கல்பனா மைதானத்தில் நடைபெற்ற பேரணியை விவேகானந்தா பள்ளி தாளாளர் மூர்த்தி துவக்கி வைத்தார். உடுமலை சுற்றுச்சூழல் சங்கத் தலைவர் மணி தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணி, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், தளிரோடு வழியாக கொட்டைத்தலையில் நிறைவடைந்தது. இதில் உலக சமாதான ஆலய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.