திருப்பூர்: நார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; பரபரப்பு வீடியோ

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் ஒன்றியம் கொண்டம்பட்டி ஊராட்சி வேலாயுதம் கவுண்டன்புதூரில் தனியாருக்கு சொந்தமான தென்னை நார் தொழிற்சாலை இயங்கி வருகின்றது. இங்கு இருந்து சீனா, மலேசியா, ஜப்பான் மற்றும் பல்வேறு நாடுகளுக்கு தினமும் தென்னை நார் மற்றும் தென்னை நார் கட்டிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் எதிர்பாராத விதமாக திடீரென தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது தீ மள மள வென பரவியது. 

பின்னர் சம்பவ இடத்திற்கு உடுமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் தீயை அணைக்க கடும் போராடினர். மேலும் தீயின் வேகம் அதிகரித்த காரணத்தால் மடத்துக்குளம் பகுதியில் இருந்து தீயணைப்பு துறை வாகனங்கள் மற்றும் 10 மேற்பட்ட குடிநீர் லாரிகள் மூலம் சுமார் 7 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இருப்பினும் தீ விபத்தில் வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கு தயாராக இருந்த 300 டன் அளவுள்ள தென்னை நார் கட்டிகள் மற்றும் இயந்திரங்கள், வாகனங்கள் எரிந்து சேதமானது. இதன் மதிப்பு சுமார் 2 கோடிக்கும் மேல் இருக்கும் என்றும் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தீயணைப்புத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி