திருப்பூர் மாவட்டம் உடுமலைக் குட்டை திடலில் நாராயண கவி மண்டபம் உள்ளது. குறிப்பு உதவி நூலகமான இங்கு உள்ள புத்தகங்களைப் படித்து குறிப்புகள் எடுப்பதற்காக போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் நாள்தோறும் வருகை தருகின்றனர். இடநெருக்கடி காரணமாக மாணவர்கள் தரையில் அமர்ந்து படிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து வளாகத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் படிப்பகக் கூடம் கட்டப்பட்டது. இந்நிலையில் சில வருடங்களாக பயன்பாட்டுக்கு வரவில்லை. இதன் காரணமாக மாணவர்கள் அவதிக்கு உள்ளாகி வந்தனர். மேலும் பல்வேறு தரப்பினர் படிப்பகத்தை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில் இன்று மண்டபத்தில் உள்ள படிப்பகம் திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கடந்த சில வருடங்களாக காட்சிப் பொருளாக காணப்பட்ட படிப்பகம் இன்று திறக்கப்பட்டதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.