மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவர்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே எல்லப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோட்டைராஜா. இவர் மனைவி மகாலட்சுமி கடந்த 29ம் தேதி வீட்டில் கன்னத்தில் காயங்களுடன் தூக்கிட்ட நிலையில் சடலமாக இருப்பது குறித்து அருகில் இருப்பவர்கள் பெருந்துறை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பெருந்துறை போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் பின்னர் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனை தொடர்ந்து பிரேதப் பரிசோதனையில் மகாலட்சுமி கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதற்கு முன்னதாக அருகில் உள்ளவர்களின் தகவலின் பேரில் கணவர் கோட்டை ராஜாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மகாலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து 7வயதில் மகன் இருப்பது குறித்து கணவர் கோட்டை ராஜாவுக்கு தெரியவந்தது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 29ம் தேதி சம்பவத்தின்போது இருவரிடையே ஏற்பட்ட தகராறில் மனைவி கழுத்து நெரித்து கொலை செய்ததாக தெரியவந்தது. இதையடுத்து பெருந்துறை போலீசார் சந்தேக மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்து கணவர் கோட்டை ராஜாவை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி