பல்லடத்தில் அடித்துக் கொலை: பரபரப்பு வீடியோ

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளம்பாளையம் பகுதியில் சொத்து விவகாரம் தொடர்பாக கம்பி வேலி அமைக்கும்போது இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் சிகிச்சை பலனின்றி நாகராஜ் என்ற 53 வயது நபர் உயிரிழந்துள்ளார். 

மங்களம் சாலை அறிவொளி நகர் பிரிவு பகுதியில் நாகராஜ் மற்றும் பழனிசாமி ஆகிய இருதரப்பினருக்கும் பாத்தியப்பட்ட நிலத்தை அளவீடு செய்வதற்காக பழனிசாமி தரப்பினர் முயன்றனர். அப்போது நாகராஜ் தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். காவல்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறையினர் எல்லாம் வந்து அளவீடு முடித்த பிறகு பேசிக்கொள்ளலாம் என்று அப்போதே சமாதானம் செய்து அனைவரையும் அனுப்பி விட்டனர்.

அதனைத் தொடர்ந்து அனைவரும் சென்ற பிறகு பேச்சுவார்த்தையை பொருட்படுத்திக் கொள்ளாமல் பழனிசாமி தரப்பினர் கம்பி வேலி போட்டுக் கொண்டிருந்தபோது அவ்வழியே சென்ற நாகராஜ் அதைக் கண்டு, அவரது சகோதரர் உள்ளிட்டோரை வரவழைத்து தடுத்தபோது பழனிசாமி, கார்த்தி, சண்முகம் உள்ளிட்டோர் நாகராஜை கடுமையாகத் தாக்கினர். 

இதனால் நாகராஜ் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து கார்த்தி, மூர்த்தி, பழனிசாமி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி