காங்கேயத்தில் வருவாய் துறையினரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

காங்கேயம் காடையூர் அருகே பசுவன்மூப்பன்வலசில் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த பொது மக்களுக்கு சொந்தமான குலதெய்வம் கோவிலை மாற்றுச் சமுதாயத்தினர் ஆக்கிரமித்து வழிபட இடையூறு செய்வதாகக் குற்றம் சாட்டப்பட்டது. பசுவன்மூப்பன்வலசு பகுதியில் உள்ள நாடார் சமுதாயத்தின் ஸ்ரீ மீனாட்சி அம்மன் பிரசன்ன ஸ்ரீ கருங்குடகருப்பணசாமி மற்றும் ஸ்ரீ காணியாளசுவாமி கோவில்கள் மாற்றுச் சமுதாயத்தின் தோட்டத்திற்குள் உள்ளதாகவும், இதனால் ஒவ்வொரு முறையும் சாமி தரிசனம் செய்ய வேண்டுமேயானால் அவர்களிடம் சாவியை வாங்கிச் செல்ல வேண்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது. 

கோவில் இடத்தை மீட்டுத் தரக் காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இருதரப்பினருக்கும் சுமுக முடிவு எட்டப்படவில்லை. பசுவன்மூப்பன்வலசு என்ற ஊரின் பெயர்ப் பலகையை அகற்றிவிட்டு தற்போது பசுவன்வலசு என மாற்றுவதற்கு முயற்சி செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

தாராபுரம் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் கோரிக்கை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் வருவாய்த்துறை அதிகாரிகளைக் கண்டித்து காங்கேயம் பேருந்து நிலையத்தில் இமானுவேல் நாடார் தலைமையில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் புதிய திராவிட கழகத்தினருடன் இணைந்து வருவாய்த்துறை அதிகாரிகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி