திருப்பூர்: லாரி -கார் மோதி விபத்து; கறிக்கடை உரிமையாளர் பலி

மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ஷேக் அப்துல் காதர் (வயது 84). இவர் கறிக்கடை நடத்தி வருகிறார். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மூலனூர் அருகே உள்ள கன்னிவாடி ஆட்டுச் சந்தையில் ஆடுகளை வாங்குவதற்கு தனது மகன்கள் அமானுல்லா (55), காதர்ஷா (52), இவர்களது நண்பர் சபிக் அகமது (53) மற்றும் சபிக்கின் மகன் அப்துல்லா (13) ஆகியோருடன் நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டில் இருந்து கிளம்பி காரில் வந்துள்ளார். 

பின்னர் சந்தையில் ஆடுகள் வாங்கி சரக்கு ஆட்டோவில் ஏற்றிவிட்டு பின்னால் காரில் சென்றுள்ளனர். கன்னிவாடி சந்தையில் இருந்து திருப்பூர் செல்வதற்கு காங்கேயம்-திருப்பூர் சாலையில் படியூர் அருகே மதியம் 2 மணி அளவில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரியின் மீது எதிர்பாராதவிதமாக கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 5 பேருக்கும் தலை, கை, கால் மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. 

உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கே அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் ஷேக் அப்துல் காதர் மட்டும் இறந்துவிட்டதாக தெரிவித்தார். மேலும் அமானுல்லா, காதர்ஷா, சபிக் அகமது மற்றும் அப்துல்லாவிற்கு முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு மேல்சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி