திருப்பூர்: தொழிலாளியை அரிவாளால் வெட்டிய சர்வர்; பரபரப்பு வீடியோ

காங்கேயம் முத்தூர் கடைவீதியில் தனியாருக்கு சொந்தமான உணவகத்தில் (மார்ச் 11) மாலை முருகேசன் (43) என்பவர் உணவருந்த சென்றுள்ளார். இவர் கூலி வேலை செய்துகொண்டு உள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, வயது முதிர்ந்த தாய் மட்டுமே உள்ளார். இந்த நிலையில் உணவகத்தில் பணியாற்றி வரும் பூமிநாதன் என்பவருக்கும் முருகேசன் என்பவருடன் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனிடையே உணவருந்தி விட்டு உணவகத்தின் வெளியே முருகேசன் வந்துகொண்டிருந்தபோது, ஹோட்டலில் இருந்து அரிவாள் எடுத்துவந்து பூமிநாதன் முருகேசனை கழுத்து, தலை ஆகிய பகுதிகளில் பயங்கரமாக வெட்டியுள்ளார். 

இதில் படுகாயம் அடைந்த முருகேசன் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் முருகேசனை காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின் மேல் சிகிச்சைக்காக முருகேசன் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

 கூலித்தொழிலாளி முருகேசனை வெட்டிய உணவக பணியாளர் பூமிநாதன் தப்பி ஓடிவிட்டான். வெள்ளகோவில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உணவகத்தில் சாப்பிட வந்தவரிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டதுடன் ஆத்திரமடைந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் முத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி