திருப்பூர்: பாத்திர கடையில் மின்கசிவு..கார் தீயில் கருகி சேதம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள சிவசக்தி நகர் பகுதிகளில் தியாகராஜன் (56) என்பவருக்கு சொந்தமான வாடகை பாத்திர கடை உள்ளது. கடையின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கு இருந்த பொதுமக்கள் உடனடியாக தாராபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தாராபுரம் தீயணைப்பு துறையினர் கடையின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் தீ எரிந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். 

விசாரணையில் மின் கசிவு ஏற்பட்டு கடையின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் முதலில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. பின்பு மெல்ல மெல்ல பரவிய தீ கடைக்குள்ளும் பரவி உள்ளே இருந்த இரண்டு சிறிய ரக சரக்கு வாகனங்களின் டயர்கள் தீயில் கருகின. மேலும் கடைக்குள் இருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் நாற்காலிகள், பிளாஸ்டிக் மேஜைகள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் கருகி சேதம் அடைந்தன. தீ விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்ட கடையில் இரண்டு கேஸ் சிலிண்டர்கள் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி