தாராபுரம்: வேன் டயர் வெடித்து கவிழ்ந்ததில் 13 பேர் படுகாயம்

தாராபுரத்தில் ஒட்டன்சத்திரம்-திருப்பூர் சாலையில் கோனாபுரம் பிரிவில் திருப்பூர் பிச்சம்பாளையத்தில் நடைபெற்ற நிச்சயதார்த்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட உறவினர்கள் 25 பேர் டெம்போ ட்ராவலர் வேனில் தங்கள் சொந்த ஊரான சாத்தூர் மாவட்டம் அருகே உள்ள மேட்டமலை திருவாச்சி ஆகிய ஊர்களுக்குச் சென்றுகொண்டிருந்தனர். ஒட்டன்சத்திரம்-திருப்பூர் சாலையில் தாராபுரம்-கோனாபுரம் பிரிவு அருகே சென்றபோது வேனின் பின் சக்கரம் திடீரென வெடித்ததில் வேன் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் தனியார் மற்றும் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்தனர். ஆம்புலன்ஸ் மூலமாக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த சாலை விபத்தில் சாத்தூரைச் சேர்ந்த பியூலா (20) என்ற கல்லூரி மாணவி மற்றும் ஜெயா (40), கௌசல்யா (37), கிருபா (34), ஜெயசீலன் (35), ஜெயா (40), மேரி (40), பாலகுமார் (27), கல்யாணி (35), பால்ராஜ் (65), ஜேசுதாஸ் (52) ஆகிய 6 பெண்கள், 7 ஆண்கள் உட்பட 13 பேர் படுகாயம் அடைந்தனர். 

இவர்களுக்கு தாராபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சிலர் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றனர். படுகாயம் அடைந்த மாணவி பியூலா மற்றும் ஜெயா ஆகியோர் மேலதிக சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வேன் ஓட்டுநர் ஜெயசீலன் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி