துறையூர்: மின் கம்பியில் உரசியதால் தீப்பற்றிய லாரி

முசிறி வட்டம் தாத்தையங்கார் பேட்டையை அடுத்துள்ள கரிகாலி பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (26). தனக்கு சொந்தமான லாரியில் வைக்கோல் ஏற்றிச் சென்று விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது. பி. மேட்டூர் இரட்டைப்பாலம் அருகே சுமார் 200 வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு நாமக்கல் பகுதியில் விற்பனை செய்வதற்காக லாரி புறப்பட்டு சென்றது. லாரியை அதன் உரிமையாளர் ரமேஷ் ஓட்டிச் சென்றார். 

பி. மேட்டூரை அடுத்துள்ள பாலகிருஷ்ணம்பட்டியில் லாரி சென்று கொண்டிருந்த பொழுது, ஊரின் நடுவே சாலையின் குறுக்கே தாழ்வாகச் சென்ற மின் கம்பிகளின் மீது லாரியின் மேலிருந்த வைக்கோல் கட்டுகள் எதிர்பாராத விதமாக மோதியதில், தீ விபத்து ஏற்பட்டது. பலத்த காற்று வீசியதால் தீ, லாரி முழுவதும் மளமளவென பரவியது. 

தகவலின் பேரில், உப்பிலியபுரம் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எரிந்து கொண்டிருந்த வைக்கோல் மற்றும் லாரியின் மீது தண்ணீரை பீச்சி அடித்து உள்ளூர் இளைஞர்கள் உதவியுடன் தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் காற்று பலமாக வீசியதால் தீ கட்டுப்பாட்டுக்குள் வராததைக் கண்டு துறையூர் தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு ஐந்து மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தொடர்புடைய செய்தி