திருச்சி தொழிலதிபர் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது

திருச்சியில் தொழிலதிபர் கொலை வழக்கில் ஏற்கெனவே 2 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி, அரியமங்கலம் பெரியார் தெரு அம்மாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 64). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவர் திங்கள்கிழமை இரவு காட்டூர் கைலாஷ்நகர் பகுதியில் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார். 

அப்பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, அதில் பொன்ராஜை சிலர் தாக்குவது பதிவாகியிருந்தது. இதுதொடர்பாக இருவரைப் பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில், அரியமங்கலம் முத்துநகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் நிஷாந்த் (வயது 27) என்பவர் தனது நண்பர்களான பாரதிராஜா, அரியமங்கலம் அம்மாகுளத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் உள்ளிட்ட சிலருடன் சேர்ந்து பொன்ராஜை அடித்து கொலை செய்தது தெரியவந்தது. பொன்ராஜின் உறவுப்பெண் ஒருவருக்கும் நிஷாந்துக்கும் முறையற்ற தொடர்பு இருந்ததாகவும், அதை கண்டித்ததால் அவரை கொலை செய்ததாகவும் நிஷாந்த் வாக்குமூலம் அளித்துள்ளார். 

இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக விசாரிக்க முயன்றதுமே ஸ்ரீரங்கம் அடையவளைஞ்சான் வீதியைச் சேர்ந்த மகேந்திரன் மகன் பிரசன்னா (வயது 20), ஸ்ரீரங்கம் வடக்கு வாசலைச் சேர்ந்த ரங்கராஜ் மகன் குணசேகர் (வயது 21) ஆகிய இருவரும் திருச்சி 6-ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி