திருச்சி: எழுத்தா் தற்கொலைக்கு நீதி கேட்டுப் போராட்டம்

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே நடராஜபுரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தில் அடகு வைத்தவர்களின் நகைகள் கையாடல் செய்யப்பட்டது தெரியவந்ததையடுத்து விசாரணை நடைபெற்றது. இதனிடையே சங்கத்தின் செயலர் பத்மாவதி, நகை மதிப்பீட்டாளர் கிருத்திகா, முதுநிலை எழுத்தர் சாமிநாதன், உர விற்பனையாளர் ராமதாஸ் ஆகிய நால்வரும் நகைகளுக்கு ஈடாகப் பணம் தருவதாகப் பேச்சுவார்த்தை நடத்தியதில், சாமிநாதன் ரூ. 4 லட்சம் பணம், 15 பவுன் தங்க நகைகள் ஆகியவற்றை சங்கத்துக்கு கொடுத்துள்ளார். 

இருப்பினும் கூட்டுறவுச் சங்க நிர்வாகத்தினர் மேலும் ரூ. 7 லட்சம் பணம் தரும்படி சாமிநாதனிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை பணிக்கு வந்த சாமிநாதன், கல்லணை அருகே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதியிருந்த இரு கடிதங்களில், தனது தற்கொலைக்கு இருவர் காரணம் என எழுதியிருந்தார். 

இந்நிலையில் சாமிநாதனின் இறப்புக்கு நீதி கேட்டும், கையாடல் செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை கோரியும் அவரின் உறவினர்கள் சனிக்கிழமை நடராஜபுரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் முன் தர்னாவில் ஈடுபட்டனர். தொடர்ந்து, சாமிநாதனின் உடலை வாங்க மறுத்து கல்லணை பிரிவுச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். திருவெறும்பூர் போலீஸாரின் சமாதானப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

தொடர்புடைய செய்தி