திருச்சி: மாணவா்களை கண்டிக்காத தலைமை ஆசிரியா் மீது வழக்கு

திருச்சி பொன்மலை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இங்கு பயிலும் மாணவர்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பயன்படுத்துவதாகவும் புகார் கூறப்பட்டது.

மேலும், வகுப்பறைகளில் ஆசிரியர் இல்லாத நேரங்களில் அல்லது மாறி வரும் இடைவெளியில் ஜன்னல் கதவுகளை திறந்து வைத்துக் கொண்டு தாளம் போடுவது, தகாத வார்த்தைகளைக் கூறி கூச்சலிடுவது உள்ளிட்ட ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடுவதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் அக்கம்பக்கத்தில் உள்ள குடியிருப்புவாசிகள் பலமுறை கூறியும், அவர் அதைக் கண்டு கொள்ளாமல் மெத்தனமாக இருந்துள்ளார்.

இந்நிலையில், இந்தச் செயலைக் கண்டிக்காத தலைமை ஆசிரியரை கண்டித்து குடியிருப்புவாசிகள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். இதிலும் தீர்வு எட்டப்படாததால், பொன்மலை காவல் நிலையத்தில் தலைமை ஆசிரியர் மீது செவ்வாய்க்கிழமை புகார் அளித்தனர். இதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். மேலும், இதுபோன்ற செயல்களில் நடவடிக்கை எடுக்காத ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய மாணவர்கள் மீதும் பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

தொடர்புடைய செய்தி